Wednesday 20 June 2018

பணம் வரவை தரும் மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறத்தின் தன்மை
இது தசைகளின் ஆற்றலைத் தூண்டும் அற்புத சக்தி படைத்தது. உடலின் எந்தப் பகுதியிலாவது மஞ்சள் அதிர்வு தடைப்பட்டால் உடலின் இயக்கம் நிறுத்தப்படும் அல்லது பக்கவாதம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மஞ்சள் நிறம் சிகப்பு, பச்சை நிறக் கதிர்களின் கலவையாகும். இரத்த நாளங்களின் இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கிறது. ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. பொலிவுடைய ஒரு கவர்ச்சியைத் தரும்.
இளமஞ்சள் எல்லோருடனும் ஒத்துழைத்து இணக்கமாக வாழத்தூண்டும். திருமணங்களில் தங்க நிறமான இந்த இளமஞ்சள் நிற உடைகளை மணமக்கள் அணிவது இதனால்தான். துக்கமான சோகநிலையை மாற்றி புத்திகூர்மையுடன் சிந்திக்கத் தூண்டும்.
மஞ்சள் நிறத்தின் தீமை
மிக பிரகாசமான பளீர் என்று கண்ணைப் பறிக்கும் எலுமிச்சை நிற மஞ்சள், மனநலம் பாதித்தவர்களை மிகவும் கிளர்ச்சியூட்டி பாதிக்கச் செய்யும். மேலும் அவர்கள் மூளையையும், மன அமைதியையும் பாதித்து, மரணப்படுகுழியிலும் தள்ளி நம்மை வேதனைக்குள்ளாக்கும். சக்தி படைத்தது. கோழைத்தனம், பயந்த சுபாவம், கெட்ட எண்ணங்களை உறுவாக்கித் தற்கொலை எண்ணம் முதலியவற்றை ஏற்படுத்தும். பிரகாசமான எலுமிச்சை நிறம் கொண்ட மஞ்சள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் வல்லமை படைத்தது.
அரக்கு மஞ்சள், டல் மஞ்சள் என்ற வெந்தய நிற மஞ்சள் பூசப்பட்ட வண்ணத்தை குழந்தைகள் விரும்பாமல் அவர்களை மனம் பிடிக்காமல் செய்து சண்டை போடவும் கவலை கொள்ளவும் வைக்கும். இதை சுவரில் அடிக்கக் கூடாது. குழந்தைகளின் மனதைப் பாதிக்கச்செய்யும். குழந்தைகளை திருப்திப்படுத்த முடியாத ஓர் உணர்வை தூண்டவல்லது இந்த நிறம். பசியாறிய குழந்தையை அழும் மனப்பான்மையோடு இருக்கும்படி செய்து வீட்டில் சுற்றியுள்ள அடுத்தவர்களது வேலை, கவனம் முதலியவற்றைப் பாதிக்கச்செய்யும். அதனால் சிறு குழந்தைகளாக (5 வயது வரையே உள்ள குழந்தைகள்) இருப்போர் வீடுகளில் இந்த வண்ணத்தைச் சுவரில் பூசவேண்டாம்.
ஆன்மீகத்தில் மஞ்சள் நிறம்
பொன்னிற மஞ்சள் – தெய்வீக உணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும், முழுவதுமாக மனதில் நிறைந்து அமைதி, பக்தி, ஞானம் ஏற்படுத்தவல்லது. மேலும், அமைதியுடன் கூடிய ஒரு நல்ல ஓய்வு நேரங்களை சந்தோஷத்தோடு அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த தெய்வீக உணர்வுக்கு பொன்னிற மஞ்சள் உகந்தது. மேலும் புதிய படைப்புக்கள், புது முயற்சிகள், இறக்க சுபாவம், தயாள குணம், தரும காரியங்களை நிறைவேற்றும் மனப்பாங்கை வளர்க்கும் சக்தி படைத்தது. பொன்னிற மஞ்சளின் சின்னம் சூரியன். கடவுளின் சக்தியைக் காட்டும் இந்நிறம், தெய்வீக சக்தியுடையது.
கோயில்களில் கடவுளுக்கு லேசான மஞ்சள் நிறமுடைய சந்தனக்காப்பு மனதிற்குள் பக்தியை நிறைவாகத் தந்து மனச்சாந்தியை அளிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் வாசனை மட்டுமல்ல, முக்கியமாக சந்தனம் (லைட்டான) மஞ்சள் நிறம் உடையதுதான் அதன் காரணம். அதேபோல் அதிக வண்ணம் சேர்த்த சந்தனப்பொட்டு வைத்திருப்போரைப் பார்த்தால், அவர்பால் உங்களுக்கு ஒரு அந்நோன்யமும் மதிப்பும் ஏற்பட்டு, அவர் ஒரு தெய்வீகக்களை நிறைந்திருப்பவராக தோன்றுவார்.
உங்கள் மனதில் மஞ்சள் பூசிய நம்குலப் பெண்களின்மேல் தனி மரியாதையும் ஒரு பயபக்தியும் தோன்றுவதும் கடவுளிடம் நமக்கு ஏற்படும் ஒரு பக்தி கலந்த உணர்ச்சிகளின் அடக்கமும் ஆகும். மேலும் பொன் வண்ண ஆடையுடுத்திய குருபகவானின் நிறமான தங்க நிற மேனியின் சிறப்பும் நாம் அந்தக் கடவுளை வணங்கச் செல்லும்போது பொன் வண்ண ஆடையுடுத்திச் செல்வது (கடவுளைத் தன்பால் இழுத்து) அவரை சாந்தப்படுத்தி நமக்கு அருள் கிடைக்கச் செய்யும் ஏதுவான ஓர் அம்சம்.
மஞ்சள் மகிமை என்ற வார்த்தையே ஒரு தனிச்சிறப்பு வார்த்தையாக நம் நாட்டில் பாராட்டிப் போற்றுவதாக அமைந்துவிட்டது.
மாலை நேரங்களில் பொன்னிற மஞ்சளாடை உடுத்தி பொது நிகழ்ச்சிகளுக்கோ, கோயில்களுக்கோ செல்வது மிகப் பொருத்தமான ஆடை அலங்காரமாகவும் உங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சியையும் மதிப்பையும் தருவனவாகவும் அமையும்.
மஞ்சள் கலந்த நீரை நம் வீட்டு விசேஷங்களில் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட உபயோகிப்பதும் வழிமுறையாக இருந்து வருகிறது. திருவிழாக்கள் முடிந்ததும் தெய்வீக நிறமான மஞ்சளைக் கலந்துதான் ஒருவருக்கொருவர் ஊற்றி மஞ்சள் நீராட்டம் என்று விழாவை இனிதே கொண்டாடி முடிக்கிறோம்.
மஞ்சளில் நனைத்து கடவுளுக்கு வேண்டி, காசு வைத்து முடிந்தால் எல்லாம் சுபமாக நடக்கும் என்ற ஐதீகமும் மஞ்சள் நிறத்தின் சிறப்பு. பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாசலில் மஞ்சள் வர்ணக்கோலம்தான் அத்தனையிலும் மிகச்சிறப்பாகக் கண்ணைக் கவர்ந்திழுக்கும்படி அமையப்பெற்றிருக்கும். மஞ்சள் நிறமில்லாத கோலம் அழகாயிராது, கலையாகவும் இருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்கமே மஞ்சள் நிறந்தானே! இதற்கு ஈடு இணை எதாகிலும் உண்டா? எல்லோரையும் காந்தம் போல் (திருடனையும் சேர்த்து!) கவர்ந்து இழுப்பது, பொன் அணிந்த ஆடவர், பெண்டிர்களைத்தானே! அழகுக்கு அழகு சேர்ப்பது தங்க நிற மஞ்சள் நகைகள்தன். அதற்கு இந்த உலகமே அடிமை. அது இதுதானே நம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம், ஆட்டி படைப்பது எல்லாம்.
மஞ்சள் நிற வாழைப்பழங்கள் வைத்து கடவுளுக்கு நைவேத்யம் செய்தால் தனிச்சிறப்புடன் பக்தியின் பழமாக கருதுகிறோம். மாங்கனியும் இதன் காரணமே. மாம்பழக்கலர் என்றாலே மஞ்சள் நிறத்தைத்தான் குறிக்கிறது. மஞ்சள் நிறமான மாங்கனியைப் பார்த்தாலே சுவைக்கத் தோன்றுவதும் அதன் நிறத்தாலேதான்.
மஞ்சள் நிற உடைகள்
இந்த வண்ணம் கறுத்த மேனியருக்காகட்டும், மாநிறத்தவருக்காகட்டும், நல்ல சிவந்த மேனியருக்காகட்டும் அழகைத் தரவல்லது. பகல், இரவு எந்த நேரத்திற்கும் ஏற்ற வண்ணம்
கவனத்தில் கொள்ளவேண்டியது: எலுமிச்சை மஞ்சளோ, நல்ல பிரகாசமான மஞ்சளையோ கறுத்த மேனியர் உடுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கறுத்த மேனியருக்கு வெந்தய வண்ணம் எனும், (மஸ்டர்டு) வெளிர் மஞ்சள் பொருத்தமாக இருக்கும், மாம்பழக்கலர், பொன்னிற மஞ்சள் எல்லாம் இவர்களின் கறுத்தமேனிக்கு கவர்ச்சியூட்டி அவர்களை அழகான பெண்களாகக் காட்டும்.
ஆண்களுக்கும் இந்த நிறங்கள் நிரம்பவே பொருந்தும். பகல் நேரத்தில் இவர்களுக்கு இது எடுப்பாகக் காட்டி அழகைக் கூட்டவல்லது. இரவு நேரத்திற்கு இது அத்தனை பொருத்தமாக இருக்காது. இந்த வெந்தயக் கலரான டல் மஞ்சள் இவர்கள் உடுத்தியிருக்கும்போது இவர்கள்மேல் பொது இடங்களில் தனிமரியாதையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது. நல்ல எண்னங்களை இவர்கள்மேல் மற்றவர்கள் கொண்டிருக்கும்படி செய்யும்.
மாநிறத்தவரும், சிவந்த மேனியரும் செந்நிறம் கலந்த மஞ்சள் வண்னத்தையும் மேலே குறிப்பிட்ட மஸ்டர்டு கலர் புடவைகளையும் உடுத்தும்போது இவர்களின் நிறத்தையும் அழகையும் மேலும் மெருகேற்றி இவர்களைப் பொன்னாக ஜொலிக்க வைக்கும். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த நிற உடை அலங்காரத்துடன் நீங்கள் வெளியே கிளம்பலாம். பொன் மஞ்சளைப்போல் ஒரு சரியான பொருத்தமான வண்ணம் சிவந்த மேனியருக்கும் மாநிறத்தவருக்கும் சோபிப்பதுபோல் வேறு நிறம் சோபிக்காது என்றே சொல்லலாம். இந்த நிறத்தால் இவர்கள் நிறம் அதிகமாகத் தெரிகிறதா இல்லை இவர்களால் இந்த நிறத்திற்கே அழகா என்ற கணக்கில் பார்ப்பவருக்கும், உடுத்தியிருப்போருக்கும் தெரியும்.

Friday 23 March 2018

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை

தினமும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் இந்த வராகி பரணியை ஒருமுறை ஜபித்தாலே நமது அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;என்பது எமது வராகி குரு அவர்கள் எமக்கு அளித்த வார்த்தாளி உபதேசம் ஆகும்;

கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல சிவனடியார்கள் இந்தப் பாடலை தினமும் ஒருமுறை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் மனதுக்குள் பாடி வந்து எந்த விதமான மாந்திரீகப் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வந்தார்கள்;எந்த விதமான துரோகமும் நெருங்காமல் நிம்மதியாக வாழ்ந்தார்கள்;

குடும்பத்தில் இருக்கும் ஒருவர் தினமும் ஜபித்து வந்தாலே குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அன்னை அரசாலை(மஹாவராகி)யின் அருள் கிட்டுகின்றது;

இந்தப் பாடலை ஒருமுறை உங்கள் கையால் எழுதிக் கொள்ளவும்;அப்படி எழுதியதையே ஜபிக்கவும்;ஒரே நாளில் எழுத சிலருக்குத்தான் நேரம் இருக்கும்;அவ்வளவு வேகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;ஏழு நாட்களுக்குள் (தினமும் ஐந்து அல்லது ஏழு பாடல்கள் வீதம்) பார்த்து எழுதி வைத்துக் கொள்வது அவசியம்;

ஜபிக்கும் போது,தலைப்பினை வாசிக்க வேண்டியதில்லை;

அன்னை அரசாலை(மஹா வராகி) பற்றிய பலவிதமான நூல்கள் கிடைக்கின்றன;ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொருவிதமான பாடல் வரிசைகளும்,வார்த்தை வித்தியாசங்களும் இருப்பதைக் காணலாம்;இதுவே முறையான முழுமையான மற்றும் பிழையற்ற பாடல் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்;

ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே