Tuesday 1 March 2016

ஆண்டாள் கோவில்

மூலவர் : வடபத்ரசாயி, ரங்கமன்னார்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஆண்டாள் ( கோதைநாச்சி )
தல விருட்சம் : -
தீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வில்லிபுத்தூர்
ஊர் : ஸ்ரீ வில்லிபுத்தூர்
மாவட்டம் : விருதுநகர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள்
மின்னனைய நுண்ணிடையார்
விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள்
கொலோ இவளைப் பெற்ற
வயிறுடையாள் என்னும்
வார்த்தை எய்து வித்த இருடீ கேசா
முலையுணாயே.
-பெரியாழ்வார்
திருவிழா:
ஆடிப்பூரத் திருவிழா 10 நாள்
புரட்டாசி பெரிய பெருமாள்
உற்சவம் 10 நாள் பங்குனி
திருக்கல்யாண உற்சவம் 10 நாள்
மார்கழி எண்ணெய் காப்பு
திருநாள் கிருஷ்ணஜெயந்தி,
வைகுண்ட ஏகாதசி ஆகிய
நாட்களில் கோயிலில் பக்தர்களின்
வருகை பெருமளவில் இருப்பது
சிறப்பு. தமிழ், ஆங்கில
வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல்
ஆகிய விசேச நாட்களில்
பெருமாளுக்கு சிறப்பு அபிசேக
ஆராதனைகள் நடைபெறும்
போது ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொள்வர்
தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம்
பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது
90 வது திவ்ய தேசம்.மூலவர்
வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். ஆண்டாள்,
ரங்கமன்னார், கருடாழ்வார்
மூவரும் ஒரே ஸ்தானத்தில்
காட்சியளிப்பது இத்தலத்தில்
மட்டுமே. இத்தலத்தினுடைய
கோபுரம்தான் தமிழக அரசின்
சின்னமாக அமைந்துள்ளது.
இங்குள்ள உற்சவர் பெருமாள்
பேண்ட், சட்டை அணிந்தே காட்சி
தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில்
உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது
கையில் பெந்துகோல் (தற்காப்பு
கோல்), இடக்கையில் செங்கோல்,
இடுப்பில் உடைவாளும் வைத்து
ராஜகோலத்தில் இருக்கிறார். இவர்
காலில் செருப்பும்
அணிந்திருப்பது விசேஷம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி
வரை, மாலை 4 மணி முதல் இரவு
8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆண்டாள்
திருக்கோயில், ஸ்ரீ
வில்லிபுத்தூர் - 626 125
விருதுநகர் மாவட்டம்.
போன்:
+91-4563 - 260 254
பொது தகவல்:
கி.பி. 1536ம் ஆண்டு பாண்டிய
மன்னர்களாலும் சோழ
மன்னர்களாலும் விரிவுபடுத்தி
கட்டப்பட்டது.
பிரார்த்தனை
திருமண வரம், குழந்தை பாக்கியம்,
கல்வி ஞானம் , வியாபார
விருத்தி, குடும்ப ஜஸ்வர்யம்
கிடைக்க, விவசாயம் செழிக்க
இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள்
வேண்டிக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு வெண்ணெய்
பூசுதல், சுவாமிக்கு தூய
உலர்ந்த ஆடை சாத்தலாம்.
ஊதுவத்தி, வெண்ணெய் சிறு
விளக்குகள், துளசி தளங்கள்,
பூக்கள், பூமாலைகள் முதலியன
படைக்கலாம். பிரசாதம் செய்து
இறைவனுக்கு பூஜை செய்து
பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது
தவிர கோயிலுக்கு வரும்
பக்தர்களுக்கு அன்னதானம்
செய்யலாம்.
தலபெருமை:
மூலஸ்தானத்தில் விமலாக்ருதி
விமானத்தின் கீழ்
வடவிருசத்தினடியில் அரவணைப்
பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி
அடிவருட சயனக்கோலத்தில்
பெருமாள் காட்சி தருகிறார்.
இவரைச் சுற்றி மூன்று
பக்கங்களிலும் கதை வேலையாய்ச்
செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன்,
சேனை முதலியார், சூரியன்,
தும்பருநாரதர், சனத்குமாரர், வில்,
கதை, சக்கரம், சங்கு, பெருமாளின்
நாபிக் கமலத்திலிருந்து உண்டான
தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள்
சனகர், கந்தர்வர்கள், சந்திரன்,
மதுகைடபர், பிருகு,
மார்க்கண்டடேயர் உருவங்கள்
இருக்கின்றன. விமானத்தைச்
சுற்றி வர விமானத்திலே ஒரு
சிறுவிட்ட வாசல் பிரகாரமும்
இருக்கிறது. இதில்
திருமுடியையும்
திருவடிகளையும் சேவிக்க
சிறிய திட்டி வாசல்கள் உள்ளன.
இவை மார்கழித் திருநாள்
ஆரம்பத்திற்கு முதல்நாள்
பிரியாவிடையன்று யாவரும்
வழிபடதிறந்து
வைக்கப்படுகின்றன.
திருத்தேர் : இக்கோயில் தேரில்
மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன்
சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சாலி வாகன சகாப்தம் கொல்லம்
1025 வருஷம் சௌமிய வருடம்
ஆவணி 13 குருவாரம் என்று
எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து
இதன் பழமை நம்மை வியக்க
வைக்கிறது.
திருப்பதியில் புரட்டாசி 3 வது
சனிக்கிழமை
பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாள்
மாலையை திருப்பதி
பெருமாளுக்கு
அணிவிக்கப்படுகின்றது.
இங்கு ஆண்டாள்
திருக்கல்யாணத்துக்கு திருப்பதி
வெங்கடாஜலபதி
கோயிலிலிருந்து திருமணப்
பட்டுப் புடவை வரும்.
மதுரையில் சித்திரைத்
திருவிழா அழகர் எதிர்
சேவையின் போது ஆண்டாள்
சூடிக்கொடுத்த மாலையைத்
தான் கள்ளழகர் அணிவிக்கிறார்.
ஆண்டாள் அவதார தலம்:
ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த
நாச்சியார் என்ற சிறப்பு பெயர்
இத்திருத்தலத்தில் தான்
கிடைக்கப்பெற்றது.
சக்கரத்தாழ்வார் சந்நதி
மிகப்புராதனமானது
பஞ்சலோகத்தால் ஆன விக்ரகமே
விக்ரகமாக விளங்குகிறது.
வேறு எங்கும் இப்படி இல்லை.
திருஷ்டிக்காக பாடிய பாடல் :
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த
பெரியாழ்வார் மதுரையில் நடந்த
போட்டியில் பொற்கிழி பரிசு
பெற்றார். பெருமாள் கருட
வாகனத்தில் தோன்றி, இப்பரிசை
கிடைக்கச் செய்தார். இந்தக்
காட்சியை அங்கு திரண்டிருந்த
பல்லாயிரக்கணக்கானோர்
தரிசித்தனர். மக்களின் கண்
பெருமாள் மீது பட்டு அவருக்கு
திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ,
அவருக்கு ஏதாவது ஆபத்து
ஏற்படுமோ என பெரியாழ்வார்
அஞ்சினார். பக்தியின் உயர்நிலை
இது. எனவே, அவர் பல்லாண்டு
வாழ வேண்டும் எனக்
கருதி,"பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டுபலகோடி
நூறாயிரம்,மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணாஉன் சேவடி செவ்வி
திருக்காப்பு' என்று துவங்கி
"திருப்பல்லாண்டு' பாடினார்.
இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய
பெருமாள், "நீரே பக்தியில்
பெரியவர்' என வாழ்த்தினார்.
அதுவரையில்
"விட்டுசித்தன்' (விஷ்ணு
சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர்,
"பெரியாழ்வார்' என்னும்
திருநாமம் பெற்றார். இந்தப்
பல்லாண்டுப் பாடலே உலகம்
முழுவதும் உள்ள திருமால்
கோயில்களில் தினமும்
பாடப்படுகிறது.
திருப்பாவை விமானம் : மார்கழி
நோன்பிருந்த ஆண்டாள்,
திருப்பாவை எனும் பிரபந்தம்
பாடினாள். 30 பாசுரங்கள்
உடையது இது. கண்ணனை
தரிசிக்க தோழியர்களை
எழுப்புவது போன்ற பொருளில்
இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும்.
தோழியரை ஆண்டாள் எழுப்பும்
சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோயில், ஆண்டாள் சன்னதி
விமானத்தில் உள்ளன. இதற்கு,
"திருப்பாவை விமானம்' என்றே
பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள்
இந்த விமானத்தை அவசியம்
தரிசிக்க வேண்டும்.
மாதவிப்பந்தல்:ஆண்டாள்
சன்னதிக்கு முன்புறத்தில்
மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள்,
இந்த பந்தலுக்கு கீழ்தான்
வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால்
அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டாள், தன்னை கோபிகையாக
பாவித்து, கண்ணனை வேண்டி
பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு
அருகிலுள்ள விதான சுவரில்
உள்ளது. இதேபோல திருப்பாவை
காட்சிகளை ஆண்டாள் கோயில்
முன்மண்டபத்தில்
ஓவியங்களாகவும் காணலாம்.
ஆண்டாள் மடியில் ரங்கநாதர்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின்
மடியில் சயனித்திருப்பார்.
அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர்
கோயில் ஆடித்திருவிழாவின் 7ம்
நாளில் ரங்கமன்னார் சுவாமி,
ஆண்டாளின் மடியில் சயனித்த
கோலத்தில் அருளுவதைக்
காணலாம். இவ்வூர் கிருஷ்ணன்
கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும்.
இந்த தரிசனம் மிகவும்
விசேஷமானது. தம்பதியரிடையே
ஒற்றுமையை வலுப்படுத்தக்
கூடியது.
ஆண்டாளின்
தாத்தா,பாட்டி: முகுந்த பட்டர்,
பத்மவல்லி என்ற பெருமாள்
பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர்
இறைவனான வடபத்ரசாயிடம் பக்தி
கொண்டவர்களாக இருந்தனர்.
கோயில் வேலை செய்து வந்த
அவர்களுக்கு கருடாழ்வாரின்
அம்சமாக, ஐந்தாவதாக ஒரு
ஆண்குழந்தை பிறந்தது.
இவருக்கு, "விஷ்ணு சித்தர்' என்று
பெயரிட்டு வளர்த்தனர். இவரும்
பெருமாள் தீராத பக்தி
கொண்டிருந்தார். அவரது
பக்தியில் மகிழ்ந்த லட்சுமி
தாயார், இவருக்கு வளர்ப்பு
மகளாக ஆண்டாள் என்ற பெயரில்
அவதரித்தாள். அவ்வகையில்
முகுந்தபட்டர், பத்மவல்லி இருவரும்
ஆண்டாளின் தாத்தா,
பாட்டியாகின்றனர்.
திரட்டுப்பால்
நைவேத்யம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
கோயிலில், மார்கழியின்
பகல்பத்து திருநாளின் முதல்நாள்,
ஆண்டாள் தம் பிறப்பிட
வம்சாவழியினரான
வேதபிரான்பட்டர் வீட்டிற்கு
செல்வாள். அந்த வீட்டு முன்பு
காய்கறிகளை பரப்பி வைத்து
ஆண்டாளுக்கு வரவேற்பு
கொடுக்கின்றனர். இதனை,
"பச்சைப்பரத்தல்' என்பர்.
கொண்டைக்கடலை, சுண்ட
காய்ச்சிய பால், வெல்லம்
ஆகியவை சேர்க்கப்பட்ட
திரட்டுப்பால், மணிப்பருப்பு
நைவேத்யத்தை ஆண்டாளுக்கு
படைக்கின்றனர். திருமணம்
முடிக்கும் பெண்கள் இதைச்
சாப்பிட்டால் ஆரோக்கியமான
உடல்நிலை கிடைக்கும்.
ஆண்டாளுக்கு பெருமாளுடன்
திருமணம் நடக்கும் முன்
அவளுக்கும் இவ்வாறு
கொடுத்தனர் அக்கால மக்கள். அதன்
நினைவாக இன்றும் இவ்வழக்கம்
தொடர்கிறது.
பால்மாங்காயை
பார்த்திருக்கிறீர்களா?:வைகாசி
பவுர்ணமியின்போது,
ஆண்டாளுக்கு தயிர் சாதம்,
"பால்மாங்காய்' நைவேத்யம்
செய்கின்றனர். சுண்ட காய்ச்சிய
பாலில் நறுக்கிய மாங்காய்
துண்டுகள், மிளகு, சீரகம், சீனி
ஆகியவை சேர்க்கப்பட்டு
தயாரிக்கப்படுகிறது. வைகாசி
கோடைமாதமாக இருப்பதால்
பெரியாழ்வார் தலைமுறையைச்
சேர்ந்த குடும்பத்தினர்
(ஆண்டாளின் வீட்டார்) இதனை
படைக்கின்றனர். இந்நேரத்தில்
ஆண்டாள் வெண்ணிற உடை,
சந்தனம், மல்லிகை மலர் சூடி
காட்சி தருவாள்.
108 கம்பளி: கார்த்திகை மாதத்தில்
வரும் கவுசிக ஏகாதசியன்று
ஆண்டாள், ரெங்கமன்னார்,
கருடாழ்வார் ஆகியோர்
வடபத்ரசாயி சன்னதியில் உள்ள
கோபாலவிலாசத்திற்கு
எழுந்தருள்கின்றனர். அப்போது
இம்மூவருக்கும் 108 கம்பளிகள்
போர்த்துகின்றனர். குளிர்காலம்
என்பதால் இவ்வாறு
செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
பாவை நோன்பு: பெண்கள்,
எவ்வாறு இருக்க வேண்டும்
என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள்
ஆண்டாள். பெருமாள் மீது பக்தி
கொண்டு அவரையே தன்
கணவனாக அடைய விரும்பியவள்.
அவள் கண்ணனை மணக்க வேண்டி
மார்கழி மாதத்தில் பாவை
நோன்பு இருந்தாள். அவளுக்கு
அருள் செய்த சுவாமி, பங்குனி
உத்திரத்தில் திருமணம் செய்து
கொண்டார். ஆகவே, பெண்கள்
பாவை நோன்பு இருந்தால்
விரும்பிய கணவன் கிடைப்பர்
என்பது நம்பிக்கை.
கன்னிகாதானம்: பங்குனி
உத்திரத்தில் ஆண்டாள்
திருக்கல்யாணம் நடக்கும்போது,
பெரியாழ்வார் தன்
இருப்பிடத்திற்கு செல்கிறார்.
அவருடன் பெரியாழ்வாரின்
வம்சாவழியினர் சேர்ந்து
கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம்
எடுத்துக் கொண்டு
ரங்கமன்னாருக்கு பூரணகும்ப
மரியாதை கொடுத்து, தங்கள்
பெண்ணை மனப்பூர்வமாக
கொடுப்பதாக சொல்லி,
கன்னிகாதானம் செய்து
கொடுக்கின்றனர். பின்
ரெங்கமன்னார், ஆண்டாளுக்கு
மாலையிட்டு தன்
மனைவியாக்கிக்கொள்கிறார்.
திருமாளிகை:ஆண்டாள்,
சிறுமியாக இருந்தபோது வளர்ந்த
திருமாளிகையே தற்போது
ஆண்டாள் கோயிலாக
இருக்கிறது. இதனை
ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீர்
கொடுத்தாராம். எனவே,
இக்கோயிலை "நாச்சியார்
திருமாளிகை' என்று
சொல்கிறார்கள்.
முத்துப்பந்தல்: ஆண்டாள்
சன்னதியில் உற்சவ மூர்த்திகள்
எழுந்தருளியிருக்கும் மண்டபம்,
"முத்துப்பந்தல்' எனப்படுகிறது.
இதில் வாழைமரம், மாவிலை
மற்றும் பூச்செண்டும்
இருக்கிறது. மேலே திருமாலின்
பாதம் இருக்கிறது.
பால்கோவா சிறப்பு
ஏன்?: ஸ்ரீவில்லிப்புத்தூர்
என்றாலே பால்கோவாதான்
நினைவிற்கு வரும். பசுமாடுகள்
நிறைந்திருக்கும் பகுதி
என்பதால் இங்கு அதிகளவில்
பால்கோவா போன்ற
பால்பொருட்கள் உற்பத்தி
செய்யப்படுகிறது.திருப்பாவை
யில், "குடம் வைக்கவைக்க பால்
நிறையும் அளவிற்கு கறவைகள்
(பசுக்கள்) அதிகமாக வாழும்
பகுதி' என்று
பொருள்படும்படியாக ஆண்டாள்
பாடியிருக்கிறாள். அவள்
இத்தலத்தை கோகுலமாகவே
எண்ணி வாழ்ந்ததால் பெருமாள்,
இப்பகுதியை பசுக்கள் நிறைந்த
பகுதியாக மாற்றி அருளினார்.
இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும்
பாலிற்கு தனி சுவை
இருக்கிறது. பால்கோவாவும்
புகழ் பெற்று விட்டது.
ஏலே' ஆண்டாளு!:
திருநெல்வேலி மாவட்டத்தில்
செல்லமாகவும், கோபமாகவும்
பயன்படுத்தப்படும் வார்த்தை
"ஏலே'. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு
காலத்தில் திருநெல்வேலியை
சார்ந்தே இருந்தது. இதன்
காரணமாக "ஏலே' என்ற வார்த்தை
இங்கும் பயன்படுத்தப்பட்டது.
ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை
"எல்லே' என்று இருந்ததாம்.
திருப்பாவையில் "எல்லே
இளங்கிளியே இன்னும்
உறங்குதியோ?' என தோழியைப்
பார்த்து கேட்கிறாள் ஆண்டாள்.
"எல்லே' என்ற செய்யுள்
வார்த்தையே திரிந்து "ஏலே'
என்று ஆனதாகச் சொல்வர்.
குழந்தைகள் ஆணாயினும்,
பெண்ணாயினும் "ஏலே' என
செல்லமாக அழைப்பர்.
பெரியவர்களிடையே சண்டை
வந்து விட்டால், வயது
வித்தியாசம் பாராமல் கோபத்தில்,
"ஏலே! உன்னை
கவனிச்சுகிறேமுலே' என்று
சொல்வது நெல்லை மக்களின்
வழக்கம்.

No comments:

Post a Comment